Monday, 2 December 2013

காதல் பிசாசு (1ம் பகுதி)


காதல் பிசாசு 1

(இது ஒரு திகில்கவிதை. பயங்கரம் நிறைந்த கவிதை உருவாக்கும் ஆசையில் எழுந்தது)

1. பெண்ணென்று எண்ணி ..!

வெயிலடித்தே உடல்நொந்த வேதனையில் புவியாள்
இருளெடுத்து மேனியதன் எழில் மறைத்துத் தூங்க
முகில்விடுத்து மோகங்கொள் முழுமதியன் புவியின்
மூடியதோர் துகில்விலக்கி மேனியெழில்காண

கிளுகிளுத்து மெளச் சிரித்து கீழ்விழுந்தே ஓடும்
குளிரெடுத்த நதியொருத்தி கொண்டஒருகாட்டில்
சிலுசிலுத்து மரங்கள்பல சேர்ந்து சிரித்தாடும்
சிறியதொரு வழியிடையே சென்றிருந்தேன் யானும்

தரு செறிந்த காட்டினிடை தவறிடும் வெண்நிலவில்
தான் எடுத்த சிறுவிளக்கை தாங்கிய மின்மினிகள்
அருகெழுந்து பறந்தவகை அழகுணர்வை ஊட்ட
அதிசயமவ் விரவினிலே அவள் குரலைக் கேட்டேன்

காற்றினில் கலந்துவந்த கீதமிசை பாடும்
கானகத்துப் பூங்குயில்யார் காணமனம் எண்ணி
மேற்றிசையில் காலெடுத்து மெல்லநடை கொள்ள
மேனிசிலிர்த் தேன்காட்சி மீதமெதைச் சொல்வேன்

சின்னதொரு மண்குடிசை முன்னர் சிலையாக
செழுமை யுடன் வாலிபத்து தேவதையோ நின்றாள்
விண்ணெழுந்த தீயெரிய. வெம்மை குளிர்காய்ந்தே
விழிநனைந்த அழகியவள். விரகஇசை கேட்டேன்

(அவள் பாடுகிறாள்)

உன்னையே எண்ணி உருகிநின்றேன் அன்பே
என்னைக் கலந்திடநீ என்று வருவாயோ
கன்னம்பிடித்தழகு காணஉந்தன் கையிருக்க
கட்டழகை வெட்டவெளிக் காற்றே தழுவுதய்யா

மேனிஅனல் பிடித்து மெல்லச் சருகானதையோ
கூனிக்கிழமெடுத்து கொள்ளமுதல் வந்திடாயோ
ஆன இளமையிவள் அழகு செழித் தானதெலாம்
தானே கருகும்வரை தவிக்கஎனை விட்டதுமேன்

பூவிதழில் வண்டுறங்கும் பொய்கையிலே மீனுறங்கும்
பாவோடு இசையுறங்கும் பனிபுல்லின் மேலுறங்கும்
பாவை இவள்உறங்கிப் பன்னெடுநாள் ஆச்சுதய்யோ
சாவில் உறங்கவெனத் தள்ளிவைத்து நின்றனையோ

கூவி அழைத்துத்தினம் குயிலாகப் பாடுகின்றேன்
மேவி எனை மயக்கி மேனிசுகம் தருவதெப்போ
தாவி உடல் வருத்தி தேகம் முறுக்கி வலி
ஆவி எடுக்கமுதல் அள்ளிச் சுகம் தாருமய்யா

உள்ளம்துடிக்குதையோ உத்தமனே எங்கிருந்தாய்
உள்ளே மனதுகல்லோ ஓடி உயிர் போகுதய்யோ
வெள்ளம் போலன்புவர வேகிடுமிக் கன்னியிவள்
வீழ்ந்து குளிப்பதனால் வேதனையும் போகாதோ

கல்லும் மனமிரங்கும் காதலனே நீஇரங்காய்
சொல்லும் இவள் முடிவை சற்று இனிக்கேளாயோ
கொல்லும் நெருப்பி லெந்தன் கோலம் அழித்திடுவேன்
இல்லையொரு மேனியெனில் இந்தவதை போகுமன்றோ

***
முன்னே இருந்தபெரு மூள் நெருப்பில் சாகவென
கன்னி நடக்கையிலே கண்டுமனம் தான் துடித்து
பெண்ணே நிறுத்து வெறும் பித்தெனவே பேசுகிறாய்
உன்னை அழித்துவிடில் உள்ளபயனேது சொலாய்

பொன்னாய் உனதுடலை பூவுலகில் செய்தவனோ
மண்ணாய் மடிவதற்கோ மாசறுபொன் மேனிவைத்தான்
மின்னல் ஒளியழகும் மேனியெனும் நல்லுருவும்
என்னே அழகு இது இவ்வுலக சொர்க்கமன்றோ

உந்தன் விரகம்உடல் கொண்டதுயர் வேதனையும்
கண்டேன் மனங்கலங்கி கண்கள் குளமாதல் தவிர்
எங்கோ ஒருவன் உனக் கிவ்வுலகில் என்றிருப்பான்
மங்கை உனையடைவான் மனம்மாறி திரும்பென்றேன்

கண்ணில் வியப்பினொளி  காட்டியெனைப் பார்த்தவளோ
காதல் கனிந்ததடி காலமுனைக் காத்ததடி
மண்ணில் எனையடைய .மாயவரே வந்துவிட்டார்
மாதென் துயரங்கள் மாறி உயிர் கொள்வனடி

வெள்ளிச் சலங்கையொலி வீசுங்குளிர் காற்றிலெழ
துள்ளிச் சிரித்தபடி சொல்லிக் கணம் மறைந்தாள்
அள்ளித் தெளித்தமதி அழகுசொரி பால்நிலவின்
கொள்ளி எரிந்தழியும் குறைஅழலின் சூழ்நிலையில்

வா என்றழைத்தாளா வண்ணமிகு மாதிவளோ
போகின்ற போதெறிந்த புன்னகைக்கு என்னபொருள்
ஏதோ மனங்குழம்பி  என்மனது சொல்லமுதல்
தானேயென் கால்நடந்து தாமரைபின் சென்றதாடா!

(தொடர் 2 காண்க)

காதல் பிசாசு (2ம் பகுதி)


காதல் பிசாசு 2

2 காதல் மயக்கம்

சென்றதிசை பார்த்தேன் செறிந்த இருள் முன்னாலே
தென்ற லசைந்தணைக்க தேகம் சிலிர்த்துறைய
நின்றெரிந்த பெருநெருப்பில் நிழல்பேயாய் முன்னாட
கொன்றை மரமொன்று கருந்தலையை அசைத்திருக்க

அச்சம் மனமெழுந்து அடிமனதும் இருதயமும்
உச்சிஉறைந்ததென உயிரைப் பிடித்துலுப்ப
பச்சை இலைக் காட்டின் படர்மணமும் சில்வண்டு
’கிச்’சென்று கத்திஒலி கொள்ளும் ஒலிகேட்டு

முன்னே தெரிந்ததொரு மூங்கில் குடிசைதனுள்
கன்னி மறைவதினைக் கண்டுமன ஆவலுடன்
தன்னந் தனி நடந்தேன் தங்கமென நிலவெறிக்க
பின்னும்கால் தயங்கி பிணைய மனம் முன்னிழுக்க

சின்னக் குடிசையுள்ளே  சென்றேன் கருமையிருள்
தன்னில் அகல்விளக்கின் தாளும் சுடர் துடிக்க
எண்ணெய் நிரப்பிஅதன் இருந்தஒளி கூட்டியவள்
என்னை வாஎனவே இருகண்ணால் வரவேற்றாள்

வானின் நிலவுதனை வாயில்கரும் பாம்புஒன்று
தானே விழுங்க வந்த தாகக்கரும் கூந்தலெழில்
திங்கள் முகம்நடுவே  திரளும்கரு முடிசுருள
சங்குக் கழுத்துடையாள் சந்தணமாய் வாசமிட்டாள்

குரலோ தேம்பாகு குறும்பவள இதழ்நடுவே
விருந்தோ எனஏங்கும் வெள்ளரிசிப் பல்வரிசை
குழம்போ அமுதமென கொள்ளுமெழில் வாயமுது
செழும்பாவை எனைப்பார்த்துச் சிரித்தவிதமோ கரும்பு

இருந்தாள் மதுக்குடமாய் ஈர்கன்னம் மாங்கனிகள்
விருந்தோ தரவென்று விரிமஞ்சம் பஞ்சணைகள்
கரங்கள் மலர்க்கொடியாய் காமன்வில் பூங்கணையாய்
சுரங்கள் மீட்டஇசை சொல்லவென அவளிருந்தாள்

கொட்டியது காசுஎனக் கொல்லென்று நகைசெய்து
தட்டில் பழமெடுத்து தங்கநிறச் செம்பினில்பால்
விட்டுக் கையேந்தி வீழ்ந்திடாதோர் அன்னநடை
கெட்டதுபோ வென்றழகு கொண்டே நடைபயின்றாள்

(மிகுதி 3 ல் தொடரும்)

காதல் பிசாசு (3ம் பகுதி)

a
காதல் பிசாசு 3

3 . பெண்ணா பேயா

கட்டவிழ்ந்த மல்லிகையை கன்னியவள் சூடியதால்
விட்டெழுந்த பூவாசம் விரைந்து மனம்மயக்க
பொட்டிட்ட பாவையினைப் பூமலரைக் கைகொள்ள
எட்டியவள் கையணைக்க ஏழைமனம் துடிதுடிக்க

மெல்ல அருகில்வர மேனியழ கென்சொல்வேன்
கொள்ளை யழகுஇவளைக் கூடுவதே என்நிலையாம்
இல்லை இவளெனக்கு என்னி லுயிர் மாண்டிடுவேன்
இந்த உலகைஇவள் ஒன்றினுக்காய் தந்திடுவேன்

அங்கே அவள்முகத்தை ஆசையுடன் நான்விழித்துப்
பெண்ணே உனையடையப் பெருந்தவமே பண்ணியுள்ளேன்
இன்றே முதல்உனக்கு எனையல்லால் யாருமிலை
வந்தே கலந்துவிடு வாழ்விலுனை அற்புதமாய்

பொன்னாய் பெரும்பொருளாய் பொக்கிஷமாய் பார்த்திடுவேன்
என்னில் அயலிருத்தி எழிலேநற் சேவைசெய்வேன்
துக்கம் தவிர்உனக்கு சொந்தமென நானிருப்பேன்
வெக்கம் தவிர்மனமோ  வேண்டுவதை கேள்என்றேன்

என்னை என்பெண்உடலில் உள்ளசுவை அத்தனையும்
ஏதறியேன் இற்றைவரை என்னுயிராம் மன்னவரே
முன்னர் ஒருவிரலும் மேனிதொட்ட தில்லையிவள்
பொன்ழகைக் கண்ணாடி புறங் காண வேறறியேன்

காட்டின் நடுவினிலே காயும்நில வாயிருந்தேன்
வீட்டின் சுவர்அறியும் வேதனையை என்நிலையை
பாட்டின் சுவைஅறிவேன் பஞ்சணையின் சுகமறியேன்
நாடியெனை அணைத்து நல்லகதை சொல்லிடுவீர்

கட்டவிழ்ந்த மல்லிகையைக் கன்னியவள் சூடியதால்
விட்டெழுந்த பூவாசம் விரைந்து மனம்மயக்க
கொட்டியது காசுஎனக் கொல்லென்று சிரித்தவிதம்
அத்தனையும் கொள்ள ஆசைமனம் ஏங்கியதே

சட்டென்று நாயொன்று சத்தமிட்டு ஊளையிட
கத்தியதோர் ஆந்தைகுரல் காதில் விழுந்திடவே
பக்கென் றடித்து மனம் பதறக் குளிர்த்தென்றல்
திக்கில் அடித்து ஒளித் தீயை அணைத்ததுவே

கும்மிருட்டில் அந்தக் கோதை அருகணைந்து
அன்பேஎன் ஆணழகே யாருமற்ற பேதைஎன்னை
எண்ணாக் கொடுமைசெய்த இளமைதனைப் பழிசெய்ய
பொல்லாக்கரமெடுத்து போதும்வரை கேட்டுவிடும்

கண்ணாலே பார்த்துக் காதல் மனம் கூசிஉடல்
புண்ணாகித்துடிக்க புன்னகையால் கொன்றுவிடு
ஏனோ இவள்தனுக்கு இத்தனைநாள் துன்பமிட்டாய்
ஆமோ முறையோ என் றத்தனையும் கேட்டுவிடு

கிட்டே அவள்அணுகி கிண்ணமொன்றில் பாலூற்றி
வெட்கி நின்றேதந்த வஞ்சியினைக் கண்பார்த்து
பூங்கை எழில்உணர்ந்து புன்னகைத்து பாற்குவளை
வாங்கி என் வாயிலிட்டேன் வழிந்ததுவோ இரத்தமடா

துடித்து எழுந்துநின்றேன் துப்பி உமிழ்ந்து வைத்தேன்
பிடித்ததோ கிண்ணமல்ல பிளந்ததோர் மண்டையென
கண்டேயக் கான்னிதனை கனலெறித்த நெஞ்சோடு
மீண்டும் கண்பார்க்க மேனிஅதிர்ந் தாடியதே

பெண்ணல்ல அங்கே பிறிதோர் உருக்கண்டேன்
வெண்ணெய் உருகுமெழில் விளைந்த உடல்கறுத்து
கன்னம்எரிந் துமுகம் கண்பிளந்து வாய்வெடித்து
என்னசொல் வேன்இருட்டில் பேயாக அவள்நின்றாள்


( மிகுதி 4 ல் தொடரும்)




காதல் பிசாசு (4 ம் பகுதி)

4 . கட்டியணைக்க வந்த கரும்பேய்

என்னே ஒரு கோரம் எரி தீயில்வீழ்ந்தெழுந்து
கன்னிக் கறுத்த உடல் கண் ஒன்று குழியிருக்க
எரித்து உடைந்தகால் இடை தொங்கப் கையினிலே
பிடித்த பழத்தட்டில் பிணங்கிழித்த அங்கங்கள்

கட்டும் உடைதீய்ந்து கால்தெரிய இடைதெரிய
சுட்ட தீக் காயங்கள் சுற்றி உடல் இருக்க
பாதி எரிந்த பிணம் பற்றி எரி சிதைவிட்டு
ஓடி யிடை எழுந்த தோர்வகையாய் தோன்றியது

சுற்றிக் கண் பார்த்தேன் சிறுதொலைவில் அப்பாலே
கட்டை அடுக்கி கனல் சுழன்று எரிநெருப்பும்
பச்சைப்பிணம் எரிந்து பரவும் புகைதான் பார்த்தே
நெற்றிவியர்த்தேன் நான் நிற்பதென்ன சுடுகாடா

கன்னி எரி தீயின் முன்னிருந்து பாடுகையில்
என்னே மயங்கிவிட்டேன்இருந்த இடம்புரியாமல்
அன்ன நடையழகில் அறிவை மயங்கவிட்டு
பின்னால் பிணம் தின்னும் பேய்விரும்பி வந்தேனே

முன்னால் இருந்தவளோ முகம்தீய்ந்து கிழவியென
கன்னம் குழி விழுந்து கடைவாயில் நீர் வழிய
காலொன்று தீயெரிந்து கரியாகி சிறுத்திருக்க
வழிந்து சிறு வதனம் வற்றியதாய் எனைப் பார்த்து

வாராய் எனதழகே வந்தே என் கனியுடலைக்
கூடாய் கூடிஒரு கோடி இன்பம் தந்திடுவாய்
மோகம் களைந்துஎனை முத்தமிட்டுமுத்தமிட்டு
தாகம்தணித்துவிடு தந்துவிடு நீ எனக்கு

என்றே இருகரமும் எடுத்துயர்த்தி அணைப்பதென
வந்தாள் நடைதளர வாழ்விதிலே முடியுதென
எண்ணி இருந்தபாற் செம்பை எடுத்தவளை
கொண்டே அடிப்பதற்கு கொள்ளக் கை செம்பல்ல

மண்டைச் சிறுஓடு மனிதஉடல் தின்றபின்னே
கொண்டதோர் மிச்சமென குலைநடுங்க கவனித்து
விட்டே எழுந்து இடம் விரைந்தோடிப் போகவென
பட்டது மனதில் ஆனால் பாவியுடல் எழவில்லை

ஓட்டம் எடுத்தேன் ஒடினேன் கால்கள்தான்
ஆட்டம் புரிந்ததன்றி அந்த இடம் நகரவில்லை
வாடிச் சோர்ந்துமன வேதனயில் நான்திரும்ப
காட்டுகரும் பேயோ கையணைக்க வந்ததடா

(மிகுதி பகுதி 5 ல்)

காதல் பிசாசு (5ம் பகுதி)


காதல் பிசாசு 5

நெஞ்சம்விறைத்துயிரும் நீங்கிவிட கேட்கஎனை
பஞ்சாய் விழிமுன்னே பரவியதென் மதிமயங்க
கொஞ்சம்பொறு என்று குற்றுயிரை நான்நிறுத்திக்
கெஞ்சிக் கதறித்தான் கேட்காயோ கடவுளென

இருகை கூப்பி மன தெண்ணி உளமுருகிக்
கருமுகிலென் றுருவாய் கனத்த வடிவெடுத்த
பெருஇருளிப் பிடிதன்னில் பிணமாகிப் போகாமல்
முருகழகா காப்பாய் என் மூச்சை நிறுத்தாதே

வொருதர மென்பிழையை உள்ளத்தில் கொள்ளாது
கருகும் உடல் எழுந்தே காணிமிப்பேய் கரத்தில்
செருகி என்உடல்பிய்த்துத் தின்றுவிட விதிஉளதோ
உருகி வரம்கேட்டேன் உடன் என்னைக் காவாயோ

அழுத விழி நீர் திரண் டாறாய் பெருக மனம்
தொழுதும் விதியிதுவோ துடித்தேன் என்காலசைய
விழுவது போலிருக்க வீற்றிருந்த இடம்பார்த்தேன்
நழுவும் மரத் துண்டம் நானிருந்த சிதைஎரிய

இறுமாப்புக் கொண்டே இருந்த இடம் என்னுடலை
குறுந்தீ வைத்தே கொளுத்தவென இருந்திடவே
மறுகி மனதஞ்சி மங்கையவள் முன்னிருக்க
விறுவிறென எழுந்தேன் விரைந்தோட முடிந்ததடா

ஆங்காங் குடல் எரிந்த அழகுச் சிதைகளெலாம்
ஓங்கியெழும் புகைகுறைய ஒளிசிறுத்து மினுமினுங்க
பாங்காய் குடல்புரட்டும் பச்சைமணம் எழுந்தேயென்
தீங்காய் உடல்வேர்த்துத் தேகமதை நடுங்கவைக்க

பேயும் துரத்திவந்தால் பேசாமலோடு ஒரு
போதும் தலைதிருப்பி பேயதனைப் பாராதே
தாயும் சிறுவயதில் தந்தஒரு அறிவுரையில்
நாயும் குரைக்க ஒருநடந்துவரும் ஒலிகேட்டும்

ஒய்ந்தே கால் வலித்தும் ஓடும்செயல் நிறுத்தாமல்
பாய்ந்தே ஓடுகின்றேன் பாதைவழி புரியவில்லை
காயும் நிலவுஒரு கருமுகிலில் பயந்தொழிய
கூவும் கோட்டானும் கூடி ஒரு சத்தமிட்டு

ஆடும்பேய்கள் சில அருகில் வரக்காணுவதாய்
கூடும் பலநினவுகளும் குருடாக்கி எனைநெருக்க
பாடும் பட்டதுயர் பாட்டிலிதைக் கூறவொரு
தேடும் வார்த்தைகளோ தீந்தமிழில் நானறியேன்

பட்டடென்றோர் கல்தடக்கப் பாதையதில் தடுமாறி
விட்டே தடாலென்று வீழ்ந்தேனே அய்யகோ!
தொட்டே மண்ணழைந்து தேகம்வலி எடுக்க
விட்டு விடுமென்னிதயம் விரைந்து துடித்திருக்க

விழுந்த இடமிருந்து வேறேதும் தோன்றாமல்
எழுந்து தலைதிருப்பி இருள்தேக மோகினியை
கழுத்தைத் திருப்பி அவள் கண்காண ஐயகோ
சுழுக்கி விழிசெருகித் தலை சுற்ற நின்றேன்

தலையைக் கழற்றியவள் தன்கரத்தில் வைத்தபடி
குலையும் நடுங்க எனைக் குனிந்து தொடவந்தாள்
மலையைப் பிரட்டும் ஒரு மதம்பிடித்த அசரீரி
நிலையும் இது ஏனடா நிமிரெனவோர் குரல்கேட்க

துள்ளி எழுந்தேன் துணிவொன்று உடல்பரவி
வெள்ளி பிழம்பொன்று வெடித்துச் சிதறியாய்
உள்ளத்திடையே ஒர் உணர்வெழவே சிலிர்த்தபடி
கள்ளக் கரும்பேயைக் கைகாட்டி நிறுத்துவதாய்

ஏய்பேயே நில்லங்கே என்னைநீ தீண்டாதே
மாய உருவெடுத்து மயக்கியது சரிதானோ ?
பாவம் எனநினத்துப் பக்கமதில் வந்தவனைப்
பேயாய்மாறி என் பிணம்தின்னக் கூடினையோ ?

ஏதோ மனதிரங்கி இருளடைந்த காட்டினிலே
தீதே அறியாமல் தேடிஒரு துணை இன்றி
ஊதி எரிநெருப்பில் உடல் கருக்கச் சென்றவளை
பாது காத்திவளின் பனிமலர்ப் பூங்கரம்பிடித்து

வாழ்வு கொடுத்திட நான் விரும்பி அருகில்வர
நாளும் அருகிருத்தி நலம்செய்வோமென நினைக்க
பாழும் பிசாசுஎனைப் பசிக்குண்ண வந்தனையோ
தேளும் கொடும்பாம்பில் தீயவளே நில்என்றேன்

(இன்னும் ஒரு பகுதியில் முடியும்)

காதல் பிசாசு (6 ம் பகுதி)

உண்மை உருவாகி.. பகுதி 6

(ஏதோ மனதிரங்கி இருளடைந்த காட்டினிலே
தீதே அறியாமல் தேடிஒரு துணை இன்றி
ஊதி எரிநெருப்பில் உடல் கருக்கச் சென்றவளை
பாது காத்திவளின்  பனிமலர்ப் பூங்கரம்பிடித்து

வாழ்வு கொடுத்திட நான் விரும்பி அருகில்வர
நாளும் அருகிருத்தி  நலம்செய்வோமென நினைக்க
பாழும் பிசாசுஎனைப் பசிக்குண்ண வந்தனையோ
தேளும் கொடும்பாம்பில் தீயவளே நில்என்றேன் )
.............................

அங்கே ஓர்கணத்தில் அலைபோல் மிதந்துருகி
வந்த செயல் விட்டுமனம் வலிந்து புன்னகைத்து
சாந்தம் அடைந்தவளாய் சரிபாதி பெண்ணாகி
மீதமுரைத்ததனை மெய்சிலிர்க்கக் கேட்டுநின்றேன்

பேயல்ல நானுமொரு பிணம் தின்னும் பிசாசல்ல
நீயே நினைத்தபடி நீசமனம் எனக்கல்ல
உந்தன் உள்ளமதில் உள்ள மனச்சாட்சியும்நான்
இந்த உருவெடுத்து இளமகளாய் பெண்ணானேன்

கண்ணிற் காண்கின்ற கன்னியர்கள் அத்தனையும்
மண்ணில் அடைந்துவிட மனம் எண்ணும் பித்தனே
உன்னை உனக்கே யார் என்று இனம் காட்டிடவே
என்னைப் பெண்ணாக்கி எதிர் நின்று பாட்டிசைத்தேன்

கட்டியது சேலையெனில் கலங்கி மனஉறுதி
விட்டவரின் பின்னாலே வீணாகச் செல்லாதே
கண்ணாலே பார்த்துருகி கதைபேசிக் கட்டழகுப்
பெண்ணின் மனதேய்த்துப் பொய் பேசிக்கூடாதே

பெண்ணும் அவள்தான் பேயாகுவாள் அன்பு
கண்ணே என்றணைக்கக் கனிவான தாயாவாள்
தன்னையே உனக்கீந்து தன்குலத்தைக் காக்குமொரு
உன்னதமானவளும் உயிர்த் தெய்வம் அவளேகாண்

கண்டதும் மஞ்சத்துக் கழைத்திடும் பெண்களும்
காதலை காசெண்ணி விற்றிடும் பெண்களும்
உண்டென்று எண்ணி உள்ளத்தே காமத்தீ
பொங்கி வழிந்திடநீ புறப்பட்டுச் செல்லாதே

காதல் செய், ஒருத்தியைக் கைபிடித் தேற்றபின்.
காண்பதை அவளிடம்  கண்டே நீ இன்பம் கொள்
ஆதல் இதுவன்றி அடுத்தபெண் நோக்காதே
ஈனச்செயல் செய்து இளமைதனைக் கெடுக்காதே

உந்தன் உள்ளத்துள் உறங்கியே கிடக்கிறேன்
என்னை நீஎழுப்பாதே எழுந்துவிடில் உன்னை நான்
பேயாய் சுடுகாட்டில்  பிணம் தின்ன அலைவதுபோல்
நீயும்பெண் உடல்பின்னே  நிலையற் றலையவைப்பேன்

//சொல்வது நன்றே ஆயின் சொந்தமென் றானவளும்
கல்மனது கொண்டு கடுஞ்சீற்றம் கலகமிட்டு
நல்லுறவு கெட்டே நடப்பளெனில் நாம்வேறு
நங்கைதனைத் தேடல்  நீதியிலை என்பதுமேன்?//

தன்னலம் தனியெண்ணித் தருகின்ற வார்த்தையிது
பெண்ணின் மனம் கொண்ட பெருந்துயரை அறியாமல்
என்னவளின் கோபம் ஏதிதனின் காரணி யென்
றுள்ளம் கொள்ளாது  ஒருசார்பாய் முடிவெடுத்தே

இல்லாள் எனதடிமை  இவளெனது போகமென
கல்லாய் உணர்வுகொண்டு காதலியை புறம்தள்ளி
நில்லாதே நேசமுடன் நிறுத்தி அவள் மனதில்
சொல்லாத சேதிஎன்ன சொல்ல வை, குறை தீர்ப்பாய்

கைபிடித்துக் காலமெலாம் காதல் சுகமளித்து
மெய்நொந்து பிள்ளைபெற்று மேனிகுலைந்தே குலத்தை
பொய்யாது காத்துமுடல்  போய்ச்சுடலை சேரும்வரை
உன்னோடு இருப்பவளை  உயர்வாக உள்ளம்வை!

பெண்ணே தாயாவாள்  பெண்ணே பேயாவாள்
பெண்ணே இன்பமெனும் பெரும்ஊற்றின் பிறப்பிடமாம்
பெண்ணே துன்பமாம்  பெண்ணே கடவுளுமாம்
பெண்ணைச் சிலை செய்யும் பெரும்சிற்பி ஆணாவான்

கூறிக்கணம் செல்லக் கோரஉருப்பேய் மறைந்து
போக இருள்தானும் கூடியதோர் சுடுகாடும்
மாறிக் கரைந்துவிட மதிபிழ்ன்று சுவர் நடுவே
மீளப் படுத்திருந்தேன் மேனி பிழைத்தது போ!

கண்டதென்ன கனவா கருஇருளும் பேய் பொய்யா
மண்டைச் சிறுஓடும்  மயக்கியதும் மாயையென
கொண்ட அனுபவமும் குலைநடுக்கம் விடவெண்ணிக்
கண்கள் கசக்கியந்த கட்டிலை விட்டெழுந்து நிற்க

கன்னி யொருத்திகுரல் கானமிசை கீதமொன்று
யன்னல் வழி வரவே யாரவளோ எனநோக்க
தென்னை நிறைந்த வொரு சிறுதோட்டம் வெளிதனிலே
பெண்ணொருத்தி நின்று  பேசுங்குயிலா யிசைத்தாள்

(அவள் பாடுகிறாள்)

உன்னையே எண்ணி  உருகிநின்றேன் அன்பே
என்னைக் கலந்திடநீ  என்று வருவாயோ
கன்னம்பிடித்தழகு காணஉந்தன் கையிருக்க
கட்டழகை வெட்டவெளிக் காற்றே தழுவுதய்யா

......???

(முடிந்தது)