1. தீராத துயரம்
நீண்டேவிரிந்த தோர் நெடுங்காட்டி னோரத்தே
மாண்டோர் உடல் தீய்க்கும் மயானக் காடொன்று
மூண்டே எரியும் தீ முன்னெழுந்து காட்சிதர
மீண்டும் முளைகொள்ளா மேதினியில் வாழ்விழந்த
பட்ட மரமொன்று பாதிக் கிளை யிரண்டு
எட்ட எரி நெருப்பில் எழும் புகை வானோங்க
வெட்டி அழித்தமர விரிகிளையின் ஒரத்தே
பெட்டைக் கிளியொன்று பேச்சின்றித் தானமர்ந்து
கண்கள் நீர்வழியக் கருகும்தீ புகைபார்த்து
மண்ணிலென் வாழ்வேது மரணத்தைக் காணுதலே
திண்ணமென் றெண்ணீத் தீயுள் உயிர்விடவும்
எண்ணப், பெருவானில் எங்கிருந்தோ வந்தகுயில்
பக்கக் கிளைதன்னில் பறந்துவந் தமர்ந்ததுவாம்
துக்கம் உளம்மீறித் துடித்திட்ட கிளிகண்டு
செக்கசிவந்த வாய்ச் சிறுகிளியின் துயரென்ன
நெக்கநெகிழ் துருக்கும் நினைவுக் கொடுமைதனை
மெல்லவிழிகண்டு மௌனத்தில் எண்ணிற்று
பொல்லா தீங்கொன்று பட்டதுவோ பகலிடையே
நெல்லும் மணி உண்ணா நீசர் விரட்டினரோ
கல்லைக் கவணிட்டு காதகரும் வீசினரோ
தொல்லைஎனச் சுற்றம் தூர விரட்டியதோ
நில்லாய் எனப்பருந்து நேர்வந்து கொத்தியதோ
அல்ல பலதெண்ணி அதிசயித்த வேளையிலே
சொல்லால் பேசுங்கிளி சோகமெனக் குமுறியது
(கிளி பேசுகிறது)
”வாச மெழும் பூப்போல் வாழ்ந்தேன் அழகுடனே
பேசி எனைமயக்கிப் பேதைமனம் கொண்டவர் யார்
ஆசைமுடிந்தவுடன் அன்புமனம் விட்டதென்ன?
தேசம்கடந்து கால் திசைகாணாச் சென்றதென்ன?
பூவை எறிந்தனைஏன்? புயலடித்து வீழ்ந்ததென
சாவை அணைத்துவிடச் சஞ்சலமும் கொண்டேனே
தேவை முடிந்தவுடன் தேடவைத்து சென்றதேன்
பாவை இவள்கொள்ளும் பாடுதுயர் அறியாயோ
பேதை உனைநம்பிப் பெண்மைதனை ஈந்தவளாம்
போதை முடிந்தவுடன் புறந்தள்ளிப் போனதென்ன?
பாதை மறந்தும் ஏன்? பார்க்க மனம் வாராதோ?
மாதைபிரிந்ததென்ன? மாற மனம் கூடலையோ?
பாவை யிவ ளெண்ணிப் பக்கம் அணைந்திலையேல்
நாவை அறுதெறிந்து நான்சாக மாட்டேனோ?
காவிஉடல் எடுத்துக் கட்டையிலே போட்டெவரும்
மேவத் தீ மூட்டாரோ? மின்னல்தான் வீழாதோ?
காதல் கனிந்ததென கற்பனையில் நானிருக்க
போதல் இனிதெனவே போனவரே எங்கு ள்ளீர்
மோதல் இருந்திடலாம் மோகம் கலைந்திடலாம்
சாதல் நிலையடைந்தேன் சற்றுமனமிளகாதோ
பக்கமிருந்தழுது பாடுங்கிளிபார்த்துமன
துக்கமெடுத்தே, தன் தோல்விதனை எண்ணிக்குரல்
விக்கித்திணறிஒரு வேதனையில் தான்துடித்து
சிக்கித் திரிந்தகுரல் சொல்லுங்கிளி மொழிகேட்டே
திக்கற்ற பேடுதனை திரும்பிக் குயில் பார்த்து
”மிக்க துயரெடுத்து மேதினியில் வாழ்பவளே
எக்கதியு மில்லையென் றிளைத்து அழுபவளே
நிர்க்கதியின் காரணமென் நானறியக் கூறென்ன
அழுத நிலைநிறுத்தி அயலிருந்த குயில்நோக்கி
எழுதும் விதிதலையில் எதை யெழுதிப்போனதுவோ
தொழுது விழுந்தழுதும் துயர் போகக்காணேனே
பொழுதிந்தவேளை நீ புரியக் கதைசொல்வேன்