Thursday, 25 April 2013

உலகை வென்றவன் ( 4ம் பகுதி)

உலகை வென்றவன் 4

 . விடியாமல் விடிந்தது

பாடல் வந்த திசையினிலே
படபட வென்றோர் ஒலிகேட்கக்
கூடல் ஒன்று சேர்வதுவாய்க்
குழுமும் மாந்தரொலி யெழவும்
தேடல்ஒன்று தொடங்கியதாய்
திக்கில் ஓசை தானுணர்ந்து
ஆடல்கண்டான் இம்சை யதன்
அருமைத் தலைவன் அழகனிவன்

அன்பே கொண்டு அகிலமதை
ஆளும் தெய்வம் நின்றுகொல்லும்
வன்மை தீது வக்கிரங்கள்
வாழும் சிலநாள்,  வலியின்றித்
தென்பும்கெட்டு தொலையும் நாள்
தூரமின்றிக் சேர்ந்துவிடும்
என்றோருண்மை கொண்டவராய்
இணையும் மக்கள் ஒலிகேட்கக்

கன்னம் சிவந்து அச்சமுடன்
காணுபேயின் தன்மையிலும்
இன்னும் பெரிதாய் சிவந்திட்ட
இளமை கொண்ட கீழ்வானம்
தன்னில் செம்மைத் தினகரனும்
தரையில் ஆட்சிகொள்ள வெனும்
உன்னத வரவை வரவேற்கும்
ஒளியும் மெல்லஎழும்வேளை

தேகம் நடுங்கிப் போய்விடினும்
தன்மை வெளியே காட்டாது
நாகம் கொண்ட நஞ்சதனில்
நலிவும் புன்மை கொண்டவனோ
பாகம் மேனி முழுதாகப்
பரவக் கொண்ட பேயரசன்
ஆகும்நிலையை புரிந்ததனால்
அகம்கொள் சினத்தில் அளவற்றான்

  (வேறு)

ஏரென நீட்டிய பல்லுடனே அந்த
இன்ன லிழைத்தவனும்
போரடா கொண்டிடப் பாடுபட்டேன் இது
போலும் எழுச்சியல்ல
பாரடா உன்னுடை மேனி அனல்கொண்டு
பற்றிடத் தீயிடுவேன்
சேரடா வானம் இப்பூவுலகில் வாழச்
சேர்ந்தவ னில்லையடா

நீதியுடன் தர்மம்  நிம்மதி ஒற்றுமைக்
கிவ்வுல கில்லையடா
பெண் கெடுத்துச் சிறுபிள்ளை கொன்றும் பலர்
சொத்தை களவெடுத்தோன்
பொய்சொல்லி உற்றவர் வாழ்வு கெடுத்துமிப்
பூமியைப் பாழ்படுத்தும்
தீயமனம் கொண்ட மானிடனே இத்
தீவினில் வாழ்ந்திடலாம்

நன்மை நீதியென்று பேசமுன்னர் அவன்
நாக்கை அறுத்துவிட்டு
கண்கள் பிடுங்கி ஓர் நெஞ்சம் கிழித்துப்பின்
கழுத்தில் தூக்கிடுவேன்
நல்லவனை இங்கு விட்டு வைத்தால்
இந்த நாடு திருந்திவிடும்
கொல்லுகிறேன் இதோ பாரென்று கூவியும்
கொல்லஓர் வாளெடுத்தான்

சொல்ல முடியாத வேதனையும் சினம்
பொங்கி எழுந்து வர
துள்ளி எழுந்து உதை கொடுத்தேன் ஏது
கண்டது பேய்க்கனவா
பெண்குரல் கேட்டு விழி திறந்தேன் முன்னே
நின்றவள் என்துணைவி
பொல்லாக் கனவது என்றேன் அவளொரு
புன்னகை தானுதிர்த்தாள்

(முடிந்தது)

No comments:

Post a Comment