Thursday, 25 April 2013

நீதி கேட்ட தேவதை (பகுதி 3)

3.  பொய்யுரைத்த பேதை

”அன்றொரு நாட்குளிர் நீருள்ளிருக்கையில்
    அல்லிக் குளத்தருகே - இவர்
என்னை கவர்ந்திடும் எண்ணமுடன்வந்து
   ஏழை மனம்புகுந்தார் - முதல்
இன்றுவரை இவர் எந்தன் மனதினில்
   ஏக்கம்தனை விதைத்து -எனைக்
கொன்றுவிடுவதுபோலும் மனதினில்
   கேடுவிளைத்து நின்றார்

சின்னவள் தானிவள் சொல்லும் மொழியுண்மை
   சிந்தை மயக்கியவர் - நிதம்
எந்தன் கனவினில் வந்து புகுந்திரு
      கன்னம் தழுவுகின்றார் -  எனைப்
பொன்னெனப் பேசி பிதற்றுகிறார் எந்தன்
       பின்னலை  நீவுகிறார் - உடன்
முன்னிருந்து முகம் கைபிடித்தேமுழு
      வெண்மதி என்குகிறார்

ஊருக்கும் உண்மைக்கும் நீதிசொல்லும் நல்ல
      உத்தமமானவரே! - சுனை
நீருக்குள் நாளொன்று நிற்கையிலே அன்று
        நெஞ்சில்புகுந் தவரோ - எவர்
யாருக்கும் ஏதும் அறியமுன்னே என்னை
      ஏனோ சிறைபிடித்தார் - இவர்
போருக்குவீரனாம் பெண்மனதை யின்று
      பித்தம்பிடிக்க வைத்தார்

பாலைக் குடிக்க எடுத்துவைத்தால் மனம்
     பாம்பின் விஷம்என்குது - தினம்
காலைவரை கண்ணை மூடினும் மைவிழி
     காணாத் துயில்போனது - இருள்
மாலை வந்தால் மனம் மாறிப் பகையென
       மங்கையெனை வாட்டுது - பெரும்
ஆலை பிழிந்திடும் செங்கரும்பாய் எந்தன்
     மேனி துயர் கொள்ளுது

கண்கள் பனித்தன தொங்கும் இமைகளில்
      கண்ணீர்த்துளி திரண்டு - வெகு
பொன்னெனும் கன்னம்கடந்து அவளது
        பேசுமிதழ் கலக்க -அந்த
சின்ன உதடு கசந்தனவோ, அவள்
      செவ்விதழ் கோணலிட்டாள் - பின்னர்
என்னைகடை விழிகொண்டு நிலைகண்டு
      ஏதோ மீண்டு முரைத்தாள்

பூவிழிமூட முடியவில்லை ஒரு
      பொழுதும் தூக்கமில்லை -எந்தன்
நாவில் தெளிவெழும் பேச்சுஇல்லை ஒரு
      நல்ல உணர்வுஇல்லை --ஆகா
ஆவிதுடிக்குது  ஆனந்தம்பொங்கவே
       கீதம் இசைத்தபடி - மலர்
தூவிமகிழ்ந்திட வேண்டிநின்றேன் இந்த
       துன்பமென் றாகிவிட்டேன்

காற்றாகி வந்து மென்கன்னம் உரசியும்
     கைகளால் நீவுகிறார் - வந்து
ஆற்றில்குளிக்கையில் ஆடுமலைகளாய்
       ஆடையைதள்ளுகிறார் -உள்ள
ஊற்றிலுணர்வினுள் உள்ளக் கிளர்ச்சியில்
      ஓடிப் பெருகுகிறார் -எந்த
வேற்றுமை யின்றியே வேண்டு மொருநீதி
      வேதனைபோயிடவே

கொட்டியதுபல பொன்விளை காசென
        கொல்லெனவே நகைத்து -உடன்
பட்டெனக் கைதட்டிப் புன்னகையில் ஆகா
        பெண்ணே கனவா என்றார் -விரல்
நெட்டி முறித்துவிரல் மடக்கி ஓகோ
          நிற்கும் இளையபெண்ணே - இங்கு
குட்டிகதை சொல்லக் கூட்டிவந்தாய் இது
        குற்றம் எனச்சினந்தான்

கட்டுக்கதையல்ல கன்னிவள் மனம்
  கள்ளம்புகுந்துவிட - இரு
வட்டவிழியழ வேதனை கூடிட
  வேறெவர் காரணமோ - ஆணும்
தொட்டு விடுவதில் மட்டுமல்ல பெண்ணின்
  தூய்மை கலைவதற்கு  - உளம்
கெட்டு அலைந்திட கூர்விழியாலென்னை
    குத்தி  அடிமை செய்தார்

மொட்டைத் தலையதும் மீசையும் கொண்டவர்
 மீண்டும் விழிஉருட்டி - நிலை
தட்டுத்தடுமாறி தன்நிலையில் சற்று
 தத்தளித்து மொழிந்தார் - இரு
வட்டவிழிகளில் நீர்துளிர்த்து வெளி
  வந்தது முத்தெனவே -அவை
பொட்டெனப் போய்நிலம் தொட்டுஅழிந்திட
  பூவைஅழகும் கண்டேன்

”செம்மை உடைத்தோனே சின்னவள் சொல்வது
    சற்றும் என் வாழ்வினிலே - ஒரு
வம்பு வழக்கிதைப் போலும் அறிந்திலேன்
    வாழ்வில் புதுவிதமே - இந்த
வெம்பும்விழி சொரி மங்கையின் பேச்சுமே
     வேடிக்கை யானதுகாண் - இதை
நம்புவதா என நானறியேன் உந்தன்
   நாமொழி கண்டுரைப்பேன்”

செந்தழல்வீசிய சின்னவளின் முகம்
   சோர்ந்து துவளக் கண்டேன் -அதில்
எந்தளவோ ஓரு யெல்லையற்ற சோகம்
    அங்கவள் மூச்சில்கண்டேன் - கண்ட
மந்தமெனும் இளம் புன்னகை யில்பெரு
    மாசறு காதல் கண்டேன் -இவள்
செந்தமிழ் பேசிடும் செல்வியின் கண்களில்
    சேருமோர் சோகங் கண்டேன்

”பொல்லா மனங்கொண்ட பொய்மகளே ஒரு
   போதும் மனம் இளகேன் - ஒரு
வல்லவன் என்னிடம் சொல்லும் பொய்யில்வந்த
   வெஞ்சினம் ஆறலற்றேன் - இங்கு
நல்லதொரு நீதிநான் சொல்லுவே”னென
    நங்கையை நோக்கி நின்றேன் - ஒரு
கல்லில் சிலையென கண்கள் பனித்திட
    கட்டுடல் ஆட நின்றாள்

(அடுத்தில் முடியும்)

No comments:

Post a Comment