Thursday, 25 April 2013

உலகை வென்றவன் ---- (2ம் பகுதி)

2 . பேயின் கோபம்

கன்னக்கரு முகம், முன்னேவெளி வந்த
கண்களுடன் பெரும் பல்லிரண்டாம்.
என்னபெரிய வயிறதுவோஅதை
ஏது சொல்வேனொரு வார்த்தையில்லை
சொன்னது கேட்டேன் பிசாசுகளின்நல்ல
சுந்தர ரூபப் பெருந்தலைவா
உன்னையடைவதில் என்னபயன் இந்த
ஊருமுலகமும் பெற்றதென்றேன்

அட்டகாசமென வாய் பிளந்தது உள்ளே
அத்தனை சொத்தைப்பல்லும் தெரிய
கொட்டி குலுங்கிச்சிரித்திட்ட போதினில்
கோரமெனக்கண்டு அச்சமுற்றேன்
வெட்டி இடிமின்னல்தானிடிக்க மேளம்
தட்டுவதுபோலத் தான் நகைத்து
பட்டிதொட்டியெங்கும் என்புகழேஇவன்
பண்ணியதா இதோ பாராய் என்றான்.

சின்னவனே இந்த மண்ணின் உரிமையை
தேவர்கள் போரினில் வென்றுவிட்டோம்
அன்னியனே இனி என்னையல்லால் இங்கு
யாரும் உனக்கென இல்லையடா
என்னை வணங்கிடு என்புகழ் பாடிடு
உன்னைஉயரத்தில் தூக்கி வைப்பேன்-
நன்மை நீதியென்று பேச்சுரைத்தால் உடன்
நாராக்கி உன்னுடல் பிய்த்தெறிவேன்

நீதி அழிந்தது பாருலகில்  எங்கும்
நீசம் மலிந்தது எம் செயலால்
ஆதித்தமிழ்க்குலத் தொன்மையென்றாய் அதில்
ஆயிரங்கள் லட்சம் கொன்றுவிட்டேன்
மீதியினர் என்னை யாசிப்பவர் இன்றேல்
பூமியை விட்டு அனுப்பிடுவேன்
பாதி உலகத்து தேசமெல்லாம் எங்கள்
பக்கமிணைந்தவர் ஆளுதல் காண்

ஓதியதை இவர்காதிற்கொண்டு இந்த
உண்மை நெறிகளை விட்டிருந்தார்
காதில் உரைப்பதைக்கேட்டிடுவாய் இந்தக்
காலமெனது கடவுளல்ல
போதில் வதை வலி பேய்க்குணமும் பல
புன்மைஇழைத்திடும் நற்திறன்கொள்
ஏதிதில் தப்பிப்பிழைத்திடுவாய் இதில்
இல்லைதர்மம் என்றும் ஆனந்திப்பேன்

ஏனோ உன்பேச்சுப் புரியவில்லை நல்ல
இம்சை புகழ்பேயே சொலவதென்ன
ஆனதென இந்தப் பூமியில் தேசங்கள்
ஆக்கிய தர்மங்கள் சட்டமெங்கே
மேனி சிவந்திட கண்ணுருட்டி என்னை
மீட்டும் கோணல்வாயில் பல்நெரித்து
ஊனை உடலுயிர் வேண்டுமென்றால் விட்டு
ஓடி வந்து பக்கம் சேர்ந்திடென்றான்


மானமது கொண்டேன் மக்களுடன் நானும்
மானிடரோடு நல்மானிடனாய்
தான தருமங்கள் புண்ணியத்தில் உயிர்
தங்கிக் கிடந்திட வாழுகிறேன்
போனது போகட்டும் சென்றிடுவாய் - இந்த
பாரை வாழவிடு என்றுரைத்தேன்
வானமதிர்ந்திட்ட பேய்சிரிப்புஒன்றில்
வார்த்தை இறுக்கிடச் சூழுரைத்தான்

தேனமுதை உண்ணத் தேவையில்லையென
தேடிவந்த என்னை நீ பகைத்தாய் !
வானமது உந்தன் மாளிகையாம் அந்த
விண்ணெழிற் தாரகை மின் விளக்காம்
காணுமிப் பூமியில் கால்நடக்கும் வித்தை
கொள்ள உன்மேனி மறந்துவிடு !
ஊனமது மண்ணுக் கென்றவனோ - உடன்
என்னுயிர் கொன்றிடச் சித்தம் கொண்டான்

என்னை இவன்கொல்லல் நிச்சயமேயென்று
இன்னுயிரில் பெரும் ஆசைகொண்டேன்!
அன்னை பராசக்தி ஆணையிடு இவன்
அன்புடையோன் உன்னில் காத்திடென்றேன்
நான் திகைக்க அந்த நானிலம் கொண்டவன்
நாடி உயிர்கொள்ள ஓடிவந்தான்
போனதுவாம் உயிரென்ன தொலையெழும்
பாடலொன்று கேட்டு நின்றுவிட்டான்

3. எங்கிருந்தோ கேட்ட பாடல்

நில்லாடா பாதக நீநிறுத்து இல்லை
நேருமடா விதி தான்உனக்கு
வல்லமை கொண்டது வானிருக்கு எமை
வாழப் படைத்திட்ட ஓர்நெருபு
தொல்லையடா இங்கு உன்பிறப்பு இனித்
தோன்றிடுமாம் விதியின் கணக்கு
எல்லையிட்டு வரும் புன்மையிற்கு இங்கு
ஏறுமடா கதிர் வாழ்வொளிக்கு

புல்லையடா என்றும் தன்பசிக்கு அந்தப்
பொல்லா விலங்கென்றும் உண்டதுண்டோ
வெல்லா தென்பதொரு கல்லெழுத்து அல்ல!
வெள்ளநீர்மேல் எழுதும்கணக்கு.
சொல்லால் சொல்லி வைத்தபொய்யுரைகள் எலாம்
 சுட்டெரிக்குமொரு சூரியத்தீ
நில்லா வானமேறி உச்சிவரும் எங்கள்
நிர்க்கதி போயொரு வாழ்வுவரும்

(இன்னுமுண்டு)

No comments:

Post a Comment