Thursday, 25 April 2013

நீதி கேட்ட தேவதை (பகுதி 4)

04.தீர்ப்பு

பாட்டினிசை கொண்டே புள்ளினங்கள் பல
   பக்க மரங்களிலே
நீட்டி வளர்கிளை நின்றொலிக்கக் கதிர்
   நீளக்கிடை முகிலுள்
காட்டில் மேலைத்திசை கண்சிவந்தும் வீசு  
   காற்றின் குளிர்த் தழுவல்
கூட்டி மெதுஇன்பம் கொள்ளக் கிடக்கையில்
   கீழே மறைந்து கொண்டான்

மென் நகைக்கும் அந்த மாதவளின்விழி
   மேவியோர் நோட்டமிட்டே      
முன்னம் இருப்பது பெண்ணவளோ ஒரு
   மேகத்தில் தேவதையோ
சின்னதெனச் சிற்பி செய்சிலையோ அன்றி
     சேரும் குவை,பொதியோ
என்ன தறிந்திடா  எண்ணம் குழைந்திட
     ஏந்திழையைக் கண்ணுற்றேன்

நீரில் எழுந்தபூ பங்கயத்தின்  நிலை
    நின்று ஆடியலைந்தாள்
வாரிக் கண்ணீர் கொட்டி நீருள் அழுதிட
     வஞ்சகம் துன்பமதை
யாரின் விழி காணா ஆன கயல்நிலை
       ஆகித்துயர் சொரிந்தாள்
பாரினிடை இந்தப் பைங்கிளியோ ஏதோ
        பாசத்திற்காய் துடித்தாள்

காட்டில் உயர்மர கூடலிலே இரு
   கண்ணும் இழந்தவளாய்
கூட்டிமனதிடை கொண்ட சோகம்பெரும்
   கொள்ளிருள் நேரத்திலே
போட்ட சிறுமணி புல்லிடையிற் தேடல்
  போல எதிரிருந்தாள்
வாட்டமதைக் கண்டேன் வாழ்வினுக்காய் இந்த
  வண்ணம் மனதெடுத்தாள்

மீட்டும் வீணையெனில் ஓங்கிப் புழுதியில்
  மோத எறிந்திடவோ
தேட்டம் மெனப் பொன்னில் வார்த்தசிலையெனில்
  தூளாய் நொருக்கிடவோ
நோட்டம்விட்டேஇதில் நானெதுசெய்வதோ
   நல்லதோர் தீர்வுதனை
தீட்டியொரு திட்டம் தோன்றிவிட அதைத்
   தேவியின் முன்பகர்ந்தேன்

உந்தன் கனவதில் வந்தவன் நானென
  உரைத்தழும் பாவையே
எந்தன்கனவிலும் வந்துவிடு எனக்
   கின்னல் விளைத்துவிடு
சிந்துமுன் புன்னகை பங்கம் இழைத்தவன்
   சிந்தையில் நீ புகுந்து
தந்துவிடு இவன் தந்தபொருள் எவை
    தானும்  முழுதெனக்கு

தொட்டுஇழைத்தவை அத்தனையும் நீயும்
    தொட்டு அளித்துவிடு
பட்டே துன்பமிட இட்ட வதைகளைப்
   பார்த்துத் திருப்பிக்கொடு
கட்டியணைத்திடில்  கட்டியணை நீயும்
    கட்டளை யிட்டுவிடு
கொட்டிகுவித்தஎன் குற்றமெல்லாம்பதில்
    கூட்டிக் கொடுத்துவிடு

உந்தன் மனம்சுட  உள்விளைத்த துயர்
   உள்ள மெடுக்கவிடு
சிந்தனைகொண்டிடத் தீயிட்டு காதலின்
    தீமை உணர்த்திவிடு
சந்தண மேனியில் செய்த குறும்புகள்
  சற்றும் தவறிவிடா
தந்ததைப்போலத்  திருப்பிக் கொடுத்திடு
   தீரும் கணக்கதற்கு

செந்தணல்வீசுமோர் சிற்பமென்றானவள்
    இந்தக் குளிர் நிலவா
சுந்தரத் தென்றலா சோலைக் குயிலிதா
    சுற்றி யெழும் புயலா
சிந்தும் எழில்மலர் சேயிழை கண்களில்
    சேர்வது முத்துக்களா
செந்தூரவாயி னிதழ்கள் துடிப்பதும்
    இன்பக் கலக்கத்திலா

செவ்வரி யோடிய கண்கள் மயங்கிடச்
    சற்று நிமிர்ந்து நின்றாள்
திவ்விய ரூபியச் சுந்தரி பொன்னெழில்
    தேகமெடுத்து நின்றாள்
கொவ்வை இதழ்களில் புன்னகை பூத்திடக்
    கொஞ்ச மருகில் வந்தாள்
எவ்விதம் நின்னுடை எண்ணத்தினுள் வரல்
     ஏழைஅறியே னென்றாள்

சொன்னவை யாவையும் செய்யக் கனவினில்
    சேருவ தேதறியேன்
முன்னிருந்து நேரில் தந்திடுவேன் ஆயின்
    மொத்தமா  யில்லை யென்றாள்
சின்னச் சிறிதெனத் தந்திடலாம் அவை
    சேர்த்துக் கணக்கிடுவேன்
என்ன கொடுப்பதில் வஞ்சனை செய்திடில்
    இட்டு வட்டி எடுப்பேன்

மன்ற நடுவரைக் காணவில்லை அவர்
   மாயமென் றாகிவிட்டார்
தென்றலே போதுமா தீர்ப்பு  திருப்தியா
   தேவையைக் கூறா யென்றேன்
கன்றிளம் மானெனத் துள்ளலுடன் அவள்
   கண்களில் மின்னொளியாய்
நின்று ஈதுகன வில்லை என்றுஎந்தன்
    நெஞ்சில்முகம் புதைத்தாள்

(முடிந்தது.)

No comments:

Post a Comment