Thursday, 25 April 2013

நீதி கேட்ட தேவதை------ (பகுதி 2 )

2. நீதியைத் தேடி

அன்னம் நடை அசைந்தாடுமிடை எழில்
    வண்ண மயிலெனவே -எந்தன்
எண்ணமது சிதைந்தோட அவள்நடை
    கண்டுமன மிழந்தேன் - செவ்
வண்ணங் குழைத்த நல்மாலைவரஅவள்
     வஞ்சியின் சொல்லினுக்கே - அவள்
திண்ண மெடுத்துமே செய்வதுமோச மென்
      றுண்மை பகரச்சென்றேன்

மஞ்சள் நிறவெயில் மாலை வீசும் காற்று
    மாந்தரின் பேச்சினொலி -  மெது
பஞ்சினில் தீயென வெந்த மனமாற
     பாலகர் கொஞ்சுமொலி -எந்தன்
நெஞ்சைக் கவர்ந்திடும் சங்கீததாளமும்
   நேரெதிர் கேட்டிருக்க - உள்ளே
சஞ்சலங் கொள்மனம் மெல்லகனிந்திடச்
    செய்தது மாலையெழில்

சின்னஇதழ் விரித்தின்ப மணமெடுத்
    தேங்கின பன்மலர்கள் - மது
தின்னவருங் கருவண்டை அசைந்தாடித்
   தேடின பூங்கொடிகள் - இனித்
தன்னவர் வந்திடுங் காலமென இல்ல
   நங்கையர் பூமுடித்து - அங்கு
சின்ன அகல்விளக் கேற்றி ஒளியிட்டு
    சித்திர மாகிநின்றார்

நெல்மணி தேடிய புள்ளினங்கள் வான்
    நீலத்தில் கோலமிட - பசும்
புல்லைக் கடித்தது போதுமென்று பசு
    போகும் வழி திரும்ப -  தமிழ்
கல்வி பயின்றிடத் திண்ணை அயல்சிறு
    கன்னியர் கூடியதும் -   சிலர்
சல்சல வென்று சலங்கை குலுங்கிட
     செந்தமிழ்க் காடியதும்


கண்டுமனதினில் கொண்ட உவகைகள்
     கொஞ்சமல்ல நடந்தேன் - அந்த
கொண்டையில் பூவிடும் நங்கைதனை அயல்
     கண்டு அருகணைந்தேன் - குறு
வண்டையுரித்தன இரண்டுகண்கள் என்னை
      கண்டு மருண்டிருக்க - மலர்
செண்டை யுருவொத்த சின்ன இதழென்னும்
       தீயி நிறம் எடுத்தாள்

வந்திட மாட்டீரென் றெண்ண முதலிங்கு
      .வந்தீர் அதிசயம்தான் - உங்கள்
சிந்தையி லென்னையும் கொண்டதனாலேயே
      இந்த நிலையும் கொண்டீர் - ஆகா
இந்தளவே எந்தன் எண்ணம் நிறைந்தவர்
      என்றுமே வாழும்வழி - அது
உந்தன் மனம் கொண்ட அன்பிலெழுவது
      ஆத்திரம் வேண்டமென்றாள்

பித்துப்பிடித்தவள் போலப்பிதற்றிடும்
     பெண்ணே பெரியோர் எங்கே - இதோ
சித்தம்பிழைத்தவள் உன்னை நம்பியிங்கே
     சேர்ந்தேன் மடமையிலே - ஒரு
எத்தன் செய்யும்வேலை இட்டவளே இனி
       என்னை மறந்துவிடு - இனி
இத்துடன் யாவும் நிறுத்திவிட்டு நீயும்
    பிழைத்தனை ஓடிவிடு

கட்டியணைத்துமே காதல் மொழிசொல்லிக்
     கைகளில் இட்டவரே - இனி
விட்டு விலகிட எண்ணியிருப்பது
     விந்தையில் விந்தையன்றோ - அன்று
தொட்டதனாலேஎன் தூயமனதினில்
      தோன்றிய வேதனையை நீவிர்
விட்டு நலங்கொளச் செய்தலன்றி ஒரு
      வேடிக்கை வேண்டியதோ

அந்தர வானிலேகூடுகட்டி அதில்
      ஆனையின்முட்டைவைத்தேன் - ஆகா
விந்தை நாலுகுஞ்சு வந்ததடாஎன்று
       வீணில் பசப்பும்பெண்ணே - இதோ
உந்தன்மொழி பொய்யும் என்னிடம் செல்லாது
        போதும் நிறுத்திவிடு - எழில்
சுந்தரியே சொல்லு சேதிகேட்கும் சபை
       சென்றது எங்கேயிங்கு

சொல்லி முடிக்க முன்வந்தவரோ - ஒரு
   சித்திரக்கேலி யென்னும்
ஒல்லி உருவமும் ஓங்கிய நெற்றியும்
    ஊடேசிலமுடிகள் -வந்து
நல்லது உங்கள் வழக்கென்ன கூறுவீர்!
   நங்கையே சொல்லிடுவாய் -என
வல்லவர் சொல்லியபோது புரிந்தது
   வந்தவர் ஊர்தலைவர்

பகுதி 3 ல் தொடரும்

No comments:

Post a Comment