Thursday, 25 April 2013

நீதி கேட்ட தேவதை--- ( பகுதி 1)

੧.வந்ததோ வினை

கண்கள் சிவந்திட நெஞ்சம் கனந்திட
  காண்பது யார்இவளோ?
பெண்ணின் குணமிழிந் தென்னைக்  
  சினந்திடும்   பேதையின் பேரெதுவோ ?
வண்ண முகம்பெருந் தீயெழுந் தாடிட
  வந்தவள் யார்மகளோ?
எண்ண மெடுத்தவள் என்னநி னைத்தனள்
   எப்படிச் சொல்லுவளோ?

மின்ன லெனவந்து நின்றவளே யுந்தன்
   மென்முகம் வாடுவதேன்?
நன்னரும் மேனி நலங்கெடக் கோபமுன்
    நெஞ்சி லெழுந்ததுமேன்?
//பன்னுரும் சேனை படைகொண்டு வீரம்
     பகை வென்ற தால்மனதில்
என்னரும் வாழ்வு இழிந்திடச் செய்திடல்
     எண்ணுவ தாகிடுமோ//

அன்னவள் பேச்சில றிந்திட ஆ இவள்
   அந்தியில் தாமரைகள்
பன்னள வென்று செறிந்த பளிங்கென்னும்
   பொய்கையில் நீந்தியவள்
முன்ன ரெழுந்தவெஞ் சூரியன் மாலையில்
   மேற்கில் சினமெழுந்து
தன்னிலை கெட்டு தணல்கொதி கொண்டு
   கடல்  கண்டு வீழுகையில்

மென்தளிர் மேனியில் தொட்ட களிப்பினில்
   துள்ளிடும் நீரலைகள்
வந்து கரைதனில் மண்ணி லுருண்டு விரைந்து
   புரண்டுசெல்ல
விந்தை பொலிந்திட வானக் குளத்திலோர்
   வெண்மதி நீந்துவதாய்
இந்த மகளிள மான்குளிர்ப் பொய்கையில்
   இன்பநீராடக் கண்டேன்

கண்கள் மறந்துமே சிந்தை யிளந்தவள்
   காரிகை யின்எழிலில்
அண்ணள வாயொரு கண்ணிமை நேர
   மயர்ந்தது நிச்சயமே
எண்ணியொருந் தவறேது மிழைத்திலேன்
   என்னவென்றே பகர்வாய்
கண்ணியம் கொண்டு கணமிடம் நீங்கிய
   காட்சி தெரிந்திலையோ

”புன்னகை கொண்டுநின் பேச்சில் மயங்கிடப்
   பேதை யல்லயிவளோ
கன்னம் பிடித்திவள் கன்னியின் பொன்னிதழ்
   கைவிரல் தொட்டதுவும்
இன்னும் அடம்பிடித் தாவல் கொண்டேயிவள்
   ஆசையில் கொஞ்சியதும்
பொன்னில் வளர்ந்தவ ளென்று பசற்றிய
   பொய்யும் மறந்ததென்ன?

கன்னியிவள் உடல் கற்பில் மாசுஎழக்
   காரிய மானவரே
என்னவென் றேயொரு நீதிசொல் லச்சபை
   முன்னேயெ ழுந்தருளும்
பின்னையி ராப்பக லோடு கலந்திடும்
    போதில் அரசமர
திண்ணையடி வந்து சேரு”மெனச் சொல்லித்
   தென்றலென நடந்தாள்

பகுதி 2 தொடரும்

No comments:

Post a Comment