2. துயரின் முடிவு
மாலை யிருள்மயக்கம் மாந்தர்வயல் தோட்டமதில்
வேலை முடித்தலைந்து வீடேகும் நேரத்தில்
தோலை எலும்பெடுத்துத் தோன்றும் சிலஎருதுகளும்
காலை எடுத்தபசி கண்டபுல் போதாமல்
நொண்டி நடந்தசைய, நோயெடுத்த முதியவரும்
வண்டியி ருந்தபடி வாய்திறந்து பெரிதிருமி
தொண்டை கனைத்தவொரு தோற்றங் கண்டேயக்
கெண்டைமீன் நீர்வெளியே கிடந்து துடித்ததென
வெண்ணை என உருகி வேதனையை கொட்டியதாய்,
கண்ணின் துளி உதிரக் காணுங்கிளி கூறியது
”பெண்ணின் நலமறியாப் பித்தர்கள் வாழும்வரை
மண்ணில் கரைவதுவோ மாதர்விழி நீராகும்
அன்னை திருவயிற்றில் அழகுமணிக் கருவுயிர்த்து
பின்னர் உதிக்கையிலே பிறந்தவொரு அழுகையவர்
கன்னத் திருந் தொழிந்து காய்வதுதான் எப்போது?
சின்னக் குழந்தையெனில் சீராட்டிப் பாட்டிசைப்பர்
கன்னி வயதென்றால் கதைநூறு பேசிடுவார்
பின்னைவீட்டிலிவள் பேசியது பார்த்ததென்பர்
கன்னத்தொரு முத்தம் கண்டதெனப் பொய்யுரைப்பர்
சின்ன மனதெடுத்து சேதிபல கூறிடுவர்
உண்மைக் காதலுடன் ஒருவன்தனை நேசிப்பின்
பெண்மைச் சுகமறிந்து பேசாமல் போயிடுவான்
மண்ணில் எறிந்ததொரு மாதுளையின் முத்தெனவே
கண்ணீர் சுரப்பதன்றி காப்பதற்கு யாருமில்லை
எண்ணத் திருத்திமன துள்ளே குமுறியொரு
கிண்ணப்பசும்பாலில் கொட்டியதோர் துளிவிசமாய்
உண்ணவும் முடியா உமிழ்ந்திடவும் மாட்டாது
மண்ணில் கிடந்துழலும் மங்கையரில் ஒன்றானேன்
என்றிடப் பூங்குயிலோ இன்னலே இல்லாத
ஒன்றில்லை வாழ்வில் உரைதிட நீகேளாய்
தென்றல் புயலாகும் திரைகடலும் பொங்கிவரும்
கொன்றை மலர்தானும் கொழுந்துவிட்டுத் தீஎரியும்
பெண்ணே உலகமதில் பெருஞ்சக்தி கொண்டவளாம்
கண்ணீர்க் கிரையாகி காலமெலாம் துஞ்சுகிறாள்
எண்ணி வெகுண்டெழுந்தால் எரியும்,ஒருமதுரையென
கண்ணை விழிக்கவோர் காற்றும் புயலாய் மாறும்
மாவுலகு சுற்றும்விசை மேலெழுந்த சூரியனாம்
காவுமிந்த அண்டவெளி காற்றில்லா சூனியமும்
ஏவி ஒரு சக்தியதன் இழுவைக்கு ஆடுதெனில்
தூவிநிலம் வீழ்சக்தி தோற்றங்களே பெண்ணாவர்
பெண்ணில் மறைந்துள்ள பெரும்சக்தி தானெழவே
அண்டம்சிலுசிலுத்து ஆகாயம் ஒடியாதோ
விண்ணில் சுழலுபவை விசையெடுத்து ஓடாதோ
அன்னை சக்தியவள் அருங்குழந்தை நீவிர்காள்
என்றாலும் இன்னல்தனை இதயத் தடக்கியொரு
மென்மை கொழித்தவராய் மௌன உருவெடுத்து
புன்னகை கொண்டேநற் பொறுமைதனைக் காத்திடுவீர்
மண்ணில் பெருவாழ்வும் மகிமையும் பொங்கி வரும்
சொல்லிச் குயிலெழுந்து சிறகடித்து வான்பறக்க
மெல்லத் திரும்பிதன் மீளாத் துயரடக்கி
கல்லாய் மனதெடுத்து கண்ணைத் துடைத்தகிளி
இல்லத் திசைநோக்கி எழுந்து பறந்ததுவே !
(முடிந்தது)
No comments:
Post a Comment